Monday, September 7, 2009

நினைவில் நின்ற கவிஞர் வைரமுத்து பேட்டி -எ.ப.அனுபவங்கள் -2

'ஸ்டீரியோ டைப்' ஆகிவிடப் போகிறதே என்கிற கவலையினாலும், 'சினிமா அலெர்ஜி இலவச கொத்தனார்' வீடு தேடி வந்து அடிப்பாரே என்கிற பயத்திலும் சினிமா சம்பந்தமில்லாமல் நான் எழுதிக் கொண்டிருக்கும் சிறுகதையை அடுத்த பதிவாகப் போடுவது என்று தீர்மானித்திருந்தேன். பாலாவிடம் தொலை பேசியில் இதை சொன்னபோது என் கதைகள் மீது நம்பிக்கை இல்லையோ என்னமோ ' கதையா! அது எங்கே சார் போகப் போகிறது! உங்க திரையுலக பத்திரிக்கை உலக அனுபவங்களை போடுங்களேன் சார்! அதுதான் கொஞம் ஸ்வாரஸ்யமாக இருக்கும் அன்று சொல்லிவிட்டார். 'இது என்னடா ந்யூஜெர்சிக்கு வந்த சோதனை' ன்னு யோசிச்சுகிட்டு இருந்தப்போ சினிமாவும் இலக்கியமும் கலந்த ஒரு 'எவர் க்ரீன் பேட்டி'யை போட்டால் என்ன என்று நினைத்தேன். இதோ போட்டுவிட்டேன்.

பெரும்பாலான பேட்டிகள் ஒரு சில வாரங்களுக்கு பிறகு பழசாய் போய்விடும். அதை திரும்ப சில மாதங்களுக்கு பிறகு படித்தால் அர்த்தமற்றதாகத் தெரியும். ஆனால் ஒரு சில கேள்விகளும் பதில்களும் எக்காலத்துக்கும் ஏற்றதாய் எப்போது படித்தாலும் அன்றைய நாளிலே பூத்த மலர் மாதிரி fresh ஆக இருக்கும். அப்படிப்பட்ட ஒன்றுதான் 1983ல் நான் எடுத்த கவிஞ்ர் வைரமுத்துவின் பேட்டி. நான் பேட்டியெடுத்த முதல் சில நிமிடங்களில் அவர் மிக்க தலை கனத்தோடு பேசியது போல் எனக்கு தோன்றியது. ஆனால் பேட்டிமுடிந்தபோது 'இதுதான் அவரது பாணி. He is talking with Self Confidence, Passion and Self Conviction என்று உணர்ந்தேன். இந்த பேட்டியுடன் கூட பத்திரிக்கை layout artist குசும்பர்கள் அவரை வெறுப்பேற்றுவது போல ஒரு கார்ட்டூன் வேறு போட்டிருந்தார்கள்.

இப்போது இசைஞானி இளையராஜாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடியபடி, A R ரகுமானை தூற்றும் கூட்டம் போல அப்போதும் வேறு ஒரு கூட்டம் இருந்தது. "பாரதிக்குப் பிறகு கண்ணதாசன் ஒருவரே இந்த நூற்றாண்டுக் கவிஞர், வைரமுத்து எல்லாம் போலி, இன்று முளைத்து நாளை உதிர்ந்து போகும் காளான்" என்று நம்பியது. வைரமுத்துவின் ஆரவாரப்பேச்சை கண்டு வெம்பியது. அந்தக் கூட்டத்தில் இருந்த 'அறிவு ஜீவி'களில் நானும் ஒருவன்! ஆனால் காலம் செல்லச் செல்ல மனது பக்குவம் அடைய அடைய, ஒருவரை நேசிப்பதால் ஒரு புதிய திறமையுள்ள, மாற்றுச் சிந்தனை உடைய மற்றவரை இகழ்தல் கூடாதென்ற உண்மை தெரிந்தது. நான் இந்த 25 ஆண்டுகளில் அவ்வப்போது மீண்டும் அந்த பழைய பேட்டியை படித்தபோது வைரமுத்துவின் சிந்தனை கூர்மையையும், சுயநம்பிக்கையையும், பாதை மாறாத அவரது தெளிந்த கொள்கைகளையும் எனக்கு ஆணித்தரமாக உணர்த்தியது. நீங்களும் படித்துப் பாருங்கள். நான் சொல்வது சரியா தவறா என்று பின்னூட்டமிடுங்கள்.

புதுக்கவிதை பிரபலமாக யார் முக்கிய காரணம்?

பால் நிலவுச் சட்டைக்கு காம்பினேஷனாய் கண்ணைக் கதற அடிக்கின்ற வண்ணக் கலவை லுங்கியணிந்து நீல வர்ண உருவத்தில் சூர்யப் புன்னகை எட்டிப் பார்க்க,பட்டி மன்றமாய் பாவித்து, ஏற்ற இறக்கங்களுடன் பதில் சொன்னார் வைரமுத்து.

புதுக்கவிதை என்பது ஓர் இயக்கம்.அதுவும் உலகம் தழுவிய இயக்கம்.தமிழ்நாட்டில் புதுக்கவிதைக்கு நதி மூலம் என்று சொன்னால் பாரதியைத்தான் சொல்ல வேண்டும்.

உபநிடதங்களை மொழி பெயர்க்கிற முயற்சியில் பாரதிக்கு ஒரு சிக்கல் தோன்றியது. அவனுடைய வழக்கமான வடிவங்களான காவடிச் சிந்துக்களும்,கண்ணிகளும் அந்த விஷயங்களை அமர்த்தி வைப்பதற்கு போதுமானவையல்ல என்பது அவன் எண்ணம்! முற்றிலும் உரைநடையில் மொழி பெயர்த்து விடவும் அவன் மனம் ஒப்பவில்லை.

எனவே இரண்டுக்கும் இடைப்பட்ட ஓர் வடிவம் தேவைப்பட்டது;அந்த வடிவத்தைத்தான் புதுக்கவிதைக்கான முயற்சியென்று நாம் சொல்ல வேண்டும்.

பின்னாளில் நா.பிச்சமூர்த்தியும், சி.சு.செல்லப்பாவும் தங்கள் போக்கில் புதுக்கவிதைகளை பயிர் செய்தார்கள். அவர்கள் வளர்த்த பள்ளியின் புதுக்கவிதைகள் மக்களைச் சென்று சேரவில்லை.
புதுக்கவிதைக்கு சமூகப் பிரக்ஞை ஏற்பட்டபோதுதான் அது மக்கள் வடிவமாக மலர்ந்தது. மரபு தெரிந்தவர்களே அப்படி அதை மலரச் செய்தார்கள். அந்த வகையில் நா.காமராசன், அப்துல் ரகுமான்,சிற்பி,மீரா போன்றவர்களே புதுக் கவிதைக்கு ஒரு சமூக அங்கீகாரம் தேடிக் கொடுத்தார்கள். இன்று இளைஞர்களே அந்த வடிவத்தை யாரும் பறிக்கமுடியாத ஆயுதமாக வைத்திருக்கின்றனர்.

புதுக்கவிதை எழுத உங்களை 'இன்ஸ்பையர்' செய்தது யார்?

கவிதையும் புதுக்கவிதையும் வேறு வேறு அல்ல என்பதென் எண்ணம். நான் கவிதை எழுதிக் கொண்டிருந்ததால் புதுக்கவிதை எழுத வந்தேனேயொழிய புதுக்கவிதைக்காக எனக்கு இன்ஸ்பைரேஷன் ஏற்படவில்லை.'வீல்ஸ் ஆஃப் க்ராஸ்'இல் இருந்து ஆரம்பித்து கவிதைகளையும் விமரிசனங்களையும் கற்றுக் கொண்டு வந்தேன். தமிழ்நாட்டில் அந்த நேரத்தில் புதுக்கவிதை விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருந்தது. 'இதுவரை நானில்' நான் சொல்லியிருப்பதை போல 'புதுக்கவிதைக்கு'ஆயிரம் கைகள் முளைத்து பண்டிதர்களின் பிடிவாத பீடத்தை அசைக்க ஆரம்பித்தது. 'வெள்ளத்தனைய மலர் நீட்டம்' என்பது போலவே புதுக்கவிதையும் வளர ஆரம்பித்தது. கவிதைக்கு எனக்கு 'இன்ஸ்பிரேஷன்' என்று சொன்னால் கண்ணதாசனைச் சொல்லுவேன்.


பாடல் என்பது மக்களைச் சென்றடையவேண்டும்! இல்லையென்றால் அந்தப் பாடலுக்கு பெருமையில்லை. கண்ணதாசனைப் பொருத்தவரை அவரது ஒவ்வொரு பாடலும் பாமர மக்கள் ஒவ்வொருவரின் வாயிலும் புரண்டெழுகிறது. உங்கள் பாடல்கள் கரடு முரடென்று 'ஸ்கொயராக' பாமரன், ஏன்! படித்தவன் வாயில் கூட நுழைவதில்லையே?

இந்தக் கருத்தை நானும் பரிசீலித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இது பரிணாமமே தவிர வேறொன்றல்ல!

பாடலின் மொழியை பாத்திரம் தீர்மானிக்கிறது. ஒரு கல்லூரி மாணவன் பாட்டு பாடினால் ஒரு பாடலின் உயரம் அதிகமாக இருந்தாலும் அதில் தப்பு இல்லை. இசை சாம்ராஜ்ஜியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட வார்த்தைகளையெல்லாம் இந்த சாம்ராஜ்ஜியத்தின் பிரஜைகளாக்கும் ப்ரயத்தனத்தில் இருக்கிறேன். ஆனால் பாத்திரம் பாமரப் பாத்திரமாக இருந்தால் என் பாடல் என்றும் அன்னியமாவதில்லை. உதாரணம் 'மலையூர் மம்பட்டியானில்' வரும் "காட்டு வழி போற பொண்ணே', 'மண் வாசனையில்' வரும் 'பொத்தி வச்ச மல்லிய மொட்டு".

ஆனால் அதே சமயத்தில் 'ஈரமான ரோஜாவே' ஒரு பட்டதாரி பாடுகின்ற பாட்டு. அதனால் பாடலின் உயரம் அதிகமாகத்தான் இருக்கும்.

ஜனங்களின் பள்ளத்துக்கு இலக்கியத்தை இறக்கி வருவது மட்டுமல்ல கவிதையின் நோக்கம். இலக்கியத்தின் உயரத்துக்கும் ஜனங்களை இட்டுச் செல்வதுவும்தான். நான் இரண்டையும் செய்துகொண்டிருப்பதாய் எண்ணுகிறேன்!

அது சரி! அதற்காக 'மரபுக் கவிதை மரணப்படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கிறது' என்று சொல்ல நீங்கள் யார்?

மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டிலும் வெற்றிகரமாக இருப்பவன் நான். இதை தமிழுலகமே அறியும். அதனாலேயே நாந்தான் அத்தாரிட்டி என்று ஆணவம் பேசமாட்டேன். முதலில் நான் வெளிப்படுத்தியிருப்பது என் ஆதங்கத்தையே தவிரஎன் ஆண்வத்தையல்ல! நான் எல்ல மரபுக்கவிதைகளையும் ஒட்டு மொத்தமாக பழித்துக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி அல்ல! கபிலனையும், திருவள்ளுவரையும், திருத்தக்க தேவரையும், கம்பனையும், பாரதியையும், பாரதிதாசனையும், கண்ணதாசனையும் எப்போதும் வணங்குபவன் நான்!

நான் சொல்வதெல்லாம் இறந்த காலத்தின் மரபுக் கவிதைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, நிகழ்கால மரபுக் கவிதைகள் இறந்து கொண்டிருக்கின்றன என்பதுதான் என் எண்ணம். மரபு தன் உள்ளடக்கத்தை மாற்றிக்கொள்ளாவிட்டால் இன்னும் உயிர் வாழ முடியாது அன் திண்ணமான எண்ணம். அதை இன்னமும் சொல்லுகிறேன்

அதற்காக புத்தகமாய் போடப்பட வேண்டிய புதுக்கவிதை வரிகளை சினிமாப் பாடல்களில் நுழைக்க வேண்டுமா என்ன?

புத்தகத்தில் இருக்கிற பாரதியின், பாரதிதாசனின் பாடல்களை திரைப்படத்தின் திரைப்பாடலாக நுழைக்கும் போது, திரைப்பாடல்கள் மட்டும் ஏன் புத்தகத்தரமாக போகக் கூடாதென்கிறீர்கள்? உங்கள் கருத்துப்படி இலக்கியம் சினிமாப் பாடலாகலாம்; ஆனால் சினிமாப் பாட்டு இலக்கியமாகக் கூடாது! அப்படியோ..??

'ஒரு இந்தியக் கனவிற்காக' என்னுடைய கவிதைத் தொகுப்பான 'திருத்தி எழுதிய தீர்ப்புகளில்' இருந்து எடுக்கப்பட்ட கவிதை திரைப்பாடலானதை தமிழ் சினிமாவின் 'மைல்கல்' என்று சொல்லலாம்.

சினிமாவில் புதுக்கவிதை பாணி தோல்வியுற்றிருக்கிறதென்ற வாதம் பற்றி?

திரை உலகில் திரைப்பாடலில் இன்று ஒரு புதிய பரிணாமம் ஏற்பட்டிருக்கிறதென்றால் அது புதுக்கவிதையின் வெற்றி என்பதென்றி வேறு இல்லை. மெட்டுக்கு எழுதுகிறபோது ஒரு கவிஞனுக்கு சின்ன சின்ன மீட்டர்தான் கிடைக்கிறது. இந்த மெட்டுக்கள், தங்களுக்குள் வாக்கியங்களை அல்ல- வார்த்தைகளைத்தான் அனுமதிக்கின்றன.

புதுக்கவிதையின் மூலமான படிமங்கள் இல்லையென்றால் இதை சமாளிப்பது சங்கடம். புதுக்கவிதையின் படிமங்கள்தான் இன்று திரைப்பாடலை திருத்தி எழுதியிருக்கிறது.

'தாவணி விசிறிகள் வீசுகிறேன்'

'காதல் என்னை காதலிக்கவில்லை'

'கண்ணீருக்கே நான் தத்துப்பிள்ளை'

'விலகிப் போனால் எனது சதங்கை விதவையாகிப் போகுமே'

'இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்'

'பாதச் சுவடு

தேடி தேடி

கால்கள் ஒய்ந்து போனதே!'

'நாளும் அழுது

தீர்த்ததாலே

கண்கள் ஏழையானதே!'

இந்த மாதிரி நூற்றுக்கணக்கான தொடர்கள் புதுக்கவிதையின் விலாசங்கள், வெற்றியின் விலாசங்கள் என்பது என் ரசிகர்களுக்குத் தெரியும்.

உங்களின் பாடல்கள் பெரும்பாலும் சிச்சுவேஷனுக்குப் பொருந்தாமல் ஒட்டுப் போட்ட கந்தைத்துணியாக இருப்பதென் காரணமென்ன?

திரைப்படத்தில் சொந்தமாக ஒரு கவிஞன் தனியாகப் பாடல் எழுதி விட முடியாது. என்னுடைய எல்லாப் பாடல்களும் சிச்சுவேஷன் சொன்னவர்களின் ஒப்புதல் பெற்றே 'ரெக்கார்ட்' செய்யப்படுகின்றன. சில பாடல்கள் சொல்லப்பட்ட சிச்சுவேஷனுக்கு மாறாக எடுக்கப்பட்டு விடும். அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.

திரும்பத் திரும்ப மோகம், மேகம், தாகம்.. இப்படி சில வார்த்தைகளையே உங்களின் அநேக பாடல்களில் நீங்கள் உபயோகப்படுத்தி இருப்பதை கவனிக்கும்போது உங்களின் தமிழ் 'ஒக்காபுலரி' குறைவோ என்கிற சந்தேகம் எழுகிறதே?

ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஒரு குறிப்பிட்ட சொல்லின் மீது எனக்கு மயக்கமிருக்கும். அந்த வார்த்தை என்னை துரத்திக்கொண்டே வந்து என்னை ஆண்டு கொண்டேயிருக்கும். சங்கீதத்திற்கு மேகம், மோகம், என்பதெல்லாம் மிக சுகமான வார்த்தைகள். எனக்கு தோன்றுகிறபோது அந்த வார்த்தைகளை விட்டு வெளியே வந்து விடுகிறேன். ஆரம்பத்தில் என் விலாசம் சொல்ல வேண்டுமென்பதற்காக சில வார்த்தைகளின் சேவகத்தை நாடியிருக்கிறேன் என்று சொல்லலாம்.

எதற்கெடுத்தாலும், யாரை வேண்டுமானாலும் நீங்கள் பாரதியோடு ஒப்பிட்டு விடுகிறீர்கள் (உதாரணம்: ஏ.வி.எம் - பாரதி கம்பேரிசன், பாவலர் வரதராஜன் - பாரதி கம்பேரிசன்) இப்படி பல இடங்களில் பாரதியை சீப்பாக்கி விடுகிறீர்களே! இது ஏன் என்று கேட்பவர்களுக்கு உங்கள் பதில் என்ன?

கருத்து பாமரனுக்கு போய் சேர வேண்டுமென்றால் பாமரனுடைய இலக்கிய வடிவத்தை கையாள வேண்டும் என்பது பாரதியின் இலக்கிய வடிவக் கொள்கை. அந்தக் கருத்தையே பாவலர் வரதராஜன் கொண்டிருக்கிறார், கையாண்டுமிருக்கிறார். விடுதலை வருவதற்கு முன்பே எத்தனை படத் தயாரிப்பாளர்கள் இருக்க அது வியாபரத்திற்குதான் என்ற போதிலும் அதை பயன்படுத்துகிற துணிச்சல் ஏ.வி.எம் க்குதானே வந்தது! அதைத்தான் பாராட்டிச் சொன்னேன். உண்மைக்கு வேறுவிதமாக உரையெழுதி விடுகிறார்கள்.

சினிமாவுக்கு அப்பாற்பட்ட வேறு புதிய முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறீர்களா?

என்னுடைய பத்தொன்பதாவது வயதில் 'வைகறை மேகங்கள்' என்கிற நூல் வந்தது. அதுதான் தமிழுலகத்திற்கு கவிழன் என்றென்னை அறிமுகப்படுத்தியது. 1979ல் 'திருத்தி எழுதிய தீர்ப்புகள்' வெளிவந்தது. அதுதான் திரு.பாரதிராஜா மூலம் திரைப்படத்திற்கு அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு 'இன்னொரு தேசிய கீதம்' , 'கவிராஜன் கதை' இவை இரண்டும் தமிழுலகத்தில் ஒரு பாதிப்பை நிகழ்த்தின. இப்போது என் 'ஜன்னலின் வழியே' என்கிற என் கலையுலக கட்டுரைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. 'இதுவரை நான்' விரைவில் நூல் வடிவில் கிடைக்கும். அடுத்து 'கொடிமரத்தின் வேர்கள்' எனும் புதுக்கவிதை தொகுதியும், 'ராத்திரி வெய்யில்' என்கிற எனது மரபுக்கவிதை தொகுதியும் வெளிவரவிருக்கின்றன. 'கரிபால்டியின் காதல் வரலார்றை' தமிழில் கவிதை நாடகமாக எழுதியிருக்கிறேன். என் புலன்கள் எனக்கு சம்மதிக்கும் காலம் வரை நான் எழுதிக்கொண்டேயிருப்பேன்.

புதுக்கவிதைக்குப் பிறகு பிற்காலத்தில் எந்தவிதமான கவிதைகள் தோன்றும்?

புதுக்கவிதை என்பது உரைநடையின் நாகரீகக் குழந்தை. எந்த ஒரு கலை வடிவமும் அந்தந்த யுகத்து மனிதனின் தேவைகளை தீர்த்து வைப்பது வரைக்கும் நிலைக்கும். எதிர்காலத்தில் கவிதைகளின் தேவைகள் கூட தீர்ந்து போகலாம். அப்போது வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஒரு புதிய வடிவம் புறப்பட்டு வரலாம். அதை காலம்தான் கணிக்கும்

இடையில் கேட்கப்பட்ட 'நீங்கள் இளையராஜாவின் திறமையில் குளிர் காய்கிறீர்கள்" என்பது போன்ற கேள்விகளை "ச! ச! இந்த நல்ல பேட்டியின் நடுவே எதற்கு அபஸ்வரம்?' என்று சொல்லி அவைகளுக்கு பதில் சொல்ல மறுத்துவிட்டு, பெய்கிற மழையின் நடுவே நனையாமல் செல்கிற சாதுர்யத்தோடு மற்ற கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார் வைரமுத்து.

என்னை சகித்து பதில் சொன்னதற்கு நான் அவரிடம் நன்றி சொல்லி விடை பெறும் போது 'ஒரு நிமிடம் இருங்கள்' என்று சொல்லி அவரது 'திருத்தி எழுதிய தீர்ப்புகள்' புத்தகத்தை அடுத்த அறையிலிருந்து எடுத்து வந்து தன் கையெழுத்திட்டு கொடுத்து என்னை வாழ்த்துக்களுடன் வழியனுப்பினார் கவிஞர் வைரமுத்து.

Wednesday, September 2, 2009

எனது பத்திரிக்கையுலக அனுபவங்கள் -1

அடியேனின் பத்து வருட பத்திரிக்கையுலக அனுபவத்தையும், நான் சந்தித்த சில notable personalities பற்றியும் பல வருடங்களாக எனது நண்பர்கள் எழுத வற்புறுத்தி வந்தார்கள். எனக்கும் அது நீண்ட நாள் ஆசைதான் என்றாலும் அலுவல் மற்றும் சோம்பேறித்தனம் காரணமாகவும் தொடங்காமலே இருந்தேன். ட்வீட்டரில் அறிமுகமானதும் என் மதிப்பிற்குறிய நண்பர்கள் ஆயில்யன், சத்யராஜ்குமார், LA ராம் மற்றும் அன்புடன் பாலா மேலும் என்னை தொடர்ந்து உற்சாகப்படுத்தியதன் விளைவு இந்த Blog. படியுங்கள், படித்துவிட்டு பின் உங்கள் எண்ணங்களையும் பின்னூட்டமிடுங்கள். நன்றி!

என் முதல் Posting என் All Time Favourite கவியரசர் கண்ணதாசனைப் பற்றியது.

முதலில் நான் பத்திரிக்கையில் freelancer ஆக எழுத ஆரம்பித்த இளம் பருவம் அது. ஆரம்பத்தில் பெரும்பாலும் சினிமா சம்பந்தப்படாத விஷயங்களைத்தான் தினமணி கதிர், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளில் எழுதி வந்தேன். முதலில் சினிமா துறை பத்திரிக்கைக்காரனாக என்னை இழுத்துப் போட்டது 'சினிமா எக்ஸ்ப்ரஸ் நவீனன்'தான்.

ஒரு நாள் சாவி பத்திரிக்கை அலுவலகம் சென்று சக பத்திரிக்கையாளர்களிடம் அரட்டை அடித்துக்கொண்டிருந்தபோது, உதவி ஆசிரியர் பாரிவள்ளல் என்னை கூப்பிட்டார். 'ஒரு முக்கியமானவர்கிட்ட ஒரு மினி பேட்டி ஒண்ணு எடுக்கனும்! செய்றீங்களா?" "யாரு கிட்ட?"அரைகுறை ஆர்வத்தோடுதான் கேட்டேன். "நம்ம கவிஞர் கண்ணதாசன் சார் கிட்டதான்" புன்சிரிப்போடு சொன்னார். நானோ ஒரு கண்ணதாச ரஸிகன்.. இல்லை!இல்லை! ஏறக்குறைய பக்தன். அவர் கவிதைகள், புத்தகங்கள், பாடல்கள் என்று ஒரே பைத்தியம்.

இதற்குமுன் மாணவர் தமிழ் மன்றத்தில் மாணவ கும்பலோடு அவரை பார்த்திருக்கிறேன். சிறப்பு பேருரை ஆற்ற வந்திருந்தார். அவரது தமிழ் உரை முடிந்து, தந்திக் கம்பத்து காக்கைகளில் ஒன்றாய் அவரோடு க்ரூப் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறேன். கிடைத்த சில மில்லி செகண்ட் தருணத்தில் ரொம்ப பக்தியோடு ரெண்டு வார்த்தை அவரோடு பேசும்போது கொலீரென மொத்த பசங்களும் மொய்த்துக்கொண்டு ஆளாளுக்கு ஏதேதோ கேட்டு என் கேள்வியை அவர்களது சப்தத்தில் மூழ்கடித்தனர். கவியரசரும் இவனுங்களோட பேசி மாயாதென்று புன்முறுவல் பூத்தபடியே கையாட்டி காரில் ஏறிப்போய்விட்டார். பிறகு பல சமயம் தொடர்ந்து அவரது வீனஸ் காலனி பேருரைகளை கேட்கப்போய் கூட்டத்தில் ஒருவராய் உட்கார்ந்து கேட்டு அவரை கிட்டத்தில் பார்க்க முடிந்ததே தவிர பேச முடியவில்லை. அது ஒரு நீண்ட நாள் ஏக்கம், அடங்காத தாகம் என்று கூட சொல்லலாம்.

அப்படிப்பட்டவனுக்கு, இந்த வாய்ப்பு பெரிய வரமாகத்தான் மடியில் வந்து விழுந்தது. விடுவேனா! 'பாரி சார்! சொல்லுங்க! என்ன பேட்டி இது?" கேட்டேன்.

பாரி வள்ளல் சின்ன சின்ன விஷயத்தையும் பூச்சூடி, பொட்டு வைத்து அழகுபடுத்தி ப்ரம்மாண்டமான ஒன்றாக காட்டுவதில் சமர்த்தர். பல்வேறு Build Upக்கு பின் விஷயத்துக்கு வந்தார். "ஒரு situation சொல்றேன். அதே மாதிரி அவருக்கு அனுபவம் இருக்கான்னு கேளுங்க! இருந்தா அதை கேட்டு சுவையாக எழுதிகிட்டு வாங்க?" என்று எனக்கு அந்த சிச்சுவேஷனையும் சொன்னார். எனக்கு என்னமோ அது ஒன்றும் ஸ்வாரஸ்யமாக பட வில்லை. கொஞ்சம் பேத்தலாகவும் தோன்றியது. இருந்தாலும் கவியரசரை கிட்ட சந்தித்து பேச சந்தர்ப்பமாச்சே என்று "OK" என்று சொன்னேன். "கவியரசர் கவிதா ஓட்டலில்தான் சாயந்திர வேளையில் இருப்பார்" என்று TIPS கொடுத்தார்.

மாலை நேரம் கோவிலுக்கு போகும் பக்தனைப் போல பஸ் பிடித்து ஆழ்வார்பேட்டை ஹோட்டல் கவிதா சென்றேன். பாரி வள்ளல் முதலிலேயே போன் பண்ணி சொல்லியிருந்தார் போல. உதவியாளர் ஒருத்தர் என்னை உள்ளே அழைத்துப் போனார். கவியரசருக்கு சொந்தமான அந்த ஹோட்டலில் கல்யாணமும் நடக்கும் லாட்ஜிங் வசதியும் உண்டு. திருமணம் நடக்கும் கீற்று கொட்டகையில் கோப்பையும் கையுமாக ஒரு மூங்கில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் சிறு டீபாய். அதன் மேல் ஏதோ ஒரு அந்நிய நாட்டு Full பாட்டில். அதனுள் தேன் வண்ண திரவம். பக்கத்தில் சற்று கறுத்த நிறத்தில் ஆனால் களையாய் ஒரு 30 -32 வயதிருக்கும் பெண். ரஸிகையா, கவிதாயினியா அல்லது மது ஊற்றிக் கொடுக்க வந்த உதவியாளரா? சரி நமக்கேன் என்று நினைத்து கவியரசரைப் பார்த்தேன்.

கவியரசர் இத்தனை அருகில்.. செக்யூரிடி கூட கிடையாது. எளிமையான மனிதர். வெள்ளை வேட்டி. வெள்ளை அரைக்கை சட்டை. நெற்றியில் விபூதிக் கீற்று. என்ன அமைதியான ஒளி வீசும் குழந்தை முகம்! 'வணக்கம் சார்." என்றேன். எனக்கென்னவோ மற்ற பத்திரிக்கையாளர் போல அண்ணே! கிண்ணே! கவிஞரே! தலைவரே! என்றெல்லாம் சொல்ல என்னமோ கூச்சமாக இருக்கும்.

"வாங்க தம்பி" கவிஞர் வரவேற்றதும் எனக்கு புல்லரித்தது. தொடர்ந்து அவர் "என்ன விஷயமா வந்தீங்க?" சொன்னேன். "உக்காருங்க'" இருபது வயது நிரம்பாத நான் எங்கே! அவர் ஸ்டேடஸ் எங்கே! அவரது Humility & Respect for others அது எவ்வளவு சிறியவனாயிருந்தாலும்.. எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. இந்த அளவுக்கு சின்னப் பயலான எனக்கும் மரியாதை தந்து ஆச்சரியப்பட வைத்த இன்னொரு உயர்ந்த மனிதர் காலம் சென்ற திரு. வி.கே.ராமசாமி அவர்கள்.

"பரவாயில்லை சார்" என்று நின்று கொண்டேன். "கூச்சப்படாதீங்க தம்பி! நீங்க நின்னுகிட்டு இருந்தா நா அண்ணாந்து பாத்து பேசனும். கழுத்த வலிக்கும்". அவை சொல்லி முடிக்கு முன் அந்த கறுத்த பெண்மணி நாற்காலியை இழுத்துப் போட தயக்கத்துடன் முனையில் உட்கார்ந்தேன்.

கண்ணதாசன்அவர்கள் வளவளவென்று பேசிக்கொண்டிருப்பதில்லை என்பதையும் மற்றவர்களை பேச விட்டு கவனித்துக் கொண்டிருப்பார் என்பதையும் அன்று அறிந்தேன். நேரடியாக விஷயத்தை எடுக்காமல் அவர் மேல் எனக்கு இருந்த வெறி, அவரது பாடல்கள், கவிதைகள் என்று என் தாகம் தணிக்கும் பேச்சுக்களில் ஈடுபட்டேன். அவ்ர் சின்னப் பயலே என்கிற உதாசீனம் இல்லாமல் பொறுமையாக என் பேச்சை இடைமறிக்காமல் கேட்டுக் கொண்டிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. " உங்களைப் போல ஒரு உயர்ந்த கவிஞரை நான் பார்த்ததில்லை! உங்களுக்கு பிறகு பார்க்கப் போவதுமில்லை" என்று கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு நான் அழுத்தமாகச் சொன்னபோது கூட அவர் முகத்தில் கர்வம் இல்லை. இந்த மாதிரி எத்தனை ஆயிரம் பேர் அவரிடம் சொல்லியிருப்பார்கள். சிரித்தபடி " சமீபத்தில் குழந்தை பாடும் தாலாட்டு' என்று எதிர் மறை இலக்கணம் வைத்து ஒரு இளைஞர் சினிமா பாட்டு எழுதியிருக்கிறார். கேட்டிருக்கீற்களா? அவரே 'வாசமில்லா மலரிது'ன்னும் எழுதியிருக்கிறார். ஒரு வேளை அவர் என் வாரிசாக வருவாரோ என்று நினைக்கிறேன்" என்றார். தலை கனம் இல்லாத, உச்சத்தில் இருந்தும் மற்றவரை புகழ்ந்து சொல்கின்ற அம்மாமனிதரின் சொற்கள் என்னை நெகிழ வைத்து விட்டன. (பின்னொருமுறை T ராஜேந்தரை பேட்டி கண்ட போது இதை சொன்னேன். ரொம்ப உணர்ச்சி வயப்பட்டு என்னை கட்டிப் பிடித்துக் கொண்டார் என்பது வேறு கதை)

அதன் பிறகு பேட்டி விஷயமாய் பாரி வள்ளல் சொன்ன சிட்சுவேஷனை விளக்கினேன். அதை சரியாக விளக்கினேனா என்று எனக்கு தெரியவில்லை. திரும்ப திரும்ப கேள்விகள் கேட்டு கவியரசர் சிந்தனையில் ஆழ்ந்தார். மீண்டும் Clarification க்காக சில கேள்விகளை கேட்டார். கொஞ்ச நேரம் கழித்து இது சம்பந்தமா சிந்தனையே ஓட மாட்டேங்கிறது. எனக்கு ரெண்டு நாள் டயம் கொடுங்க. மீண்டும் வந்து இதே இடத்தில் பாருங்க! யோசிச்சு வைக்கிறேன்" என்றார்.

இரண்டு நாள் கழித்து மீண்டும் ஆர்வத்துடன் கவிதா ஓட்டலுக்கு அவர் சொன்ன மாலை நேரத்தில் போனேன். அதே கீற்றுக் கொட்டகையில் டீபாய் மேல் பாட்டில்சகிதம் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். கொஞம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அந்த கறுப்பு அழகியை காணவில்லை.

மெல்ல நடந்து அவர் அருகில் சென்று வணக்கம் சொன்னேன். " வாங்க தம்பி" வரவேற்றார். ஆனால் இந்த முறை உட்காரச் சொல்லவில்லை. அப்போதே எனக்கு உறைத்திருக்க வேண்டும் அவருக்கு 'மூட்' சரியில்லை என்று. என்னை கொஞம் ஏற இரங்கப் பார்த்தவர் 'ரெண்டு நாளா இத யோசிச்சேன் தம்பி. மண்டை வறண்டதுதான் மிச்சம். எத்தனையோ பேட்டிகள் கொடுத்திருக்கேன். இந்த மாதிரி எதுவும் என்னை பைத்தியம் பிடிக்க வச்சதில்ல. என் சிந்தனையையே ரெண்டு நாளா கெடுத்துடுச்சு. என்ன மாதிரி கேள்வி இது? உங்க ஆசிரியர் கிட்ட சொல்லி கொஞ்சம் அர்த்தமுள்ள பேட்டிகளா எடுக்க சொல்லுங்க!" அவர் குரலில் கோபமில்லை சற்று எரிச்சல் இருந்த மாதிரி தோன்றியது. அவ்ர் கண்கள் கூட கொஞ்சம் சிவந்திருந்ததாஅல்லது நான் கற்பனை செய்து கொண்டேனா தெரியவில்லை. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மிக இளம் வயது, அனுபவமில்லை இந்த சூழலை சமாளிக்கும் பக்குவம் இல்லை. " மன்னிக்கனும் சார். உங்களை பார்த்து பேசியதே என் பாக்கியம். வரேன்" என்று புறப்பட ஆயத்தமானேன். அவர் பதில் சொல்லவில்லை. கன்னத்தில் ஆள் காட்டி விரலையும் முகவாய் கட்டையில் பெருவிரலையும் வைத்தபடி கண்மூடி சிந்தனையில் ஆழ்ந்து போயிருந்தார். எனக்கு உற்சாகம் மொத்தம் வடிந்து போய் என்னவோ போல் ஆகிவிட்டது.

வெளியே வந்து பஸ் பிடித்து வீட்டிற்கு போனபோதும், படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தபோதும் ஒரு மாபெரும் கவியரசரை எரிச்சல் மூட்டி விட்டோமோ என்று என் மீதே அருவெருப்பும் கன்னா பின்னாவென்று முட்டாள்தனமாக ஒரு சிட்சுவேஷனை தந்த பாரி வள்ளலின் மீது கடும்கோபமும் வந்தது.

இரண்டுநாள் சாவி அலுவலகமே போகவில்லை. இந்த சம்பவத்தை பற்றி இன்று வரை யாரிடமும் சொன்னதில்லை. எப்படி சொல்லுவேன். பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய நிகழ்ச்சியா இது? பின்பு சாவி அலுவலகம் போனபோது பாரிவள்ளல் இல்லை. நிம்மதி பெருமூச்சு விட்டேன். அந்த நிம்மதி கொஞ்ச நேரத்துக்குத்தான். திடு திடுப்பென எங்கிருந்தோ உள்ளே நுழைந்தவர் என்னை கவனித்து விட்டார். "என்ன ஆச்சு! பேட்டி கிடச்சுதா?" உதடு வரை வந்த" உதக்காம உட்டாரே" வை மனசுக்குள் அடக்கி "அவர் ரொம்ப பிசி! அர்த்தமுள்ள மதம் அடுத்த பாகம் எழுதிகிட்டிருக்கார். இதப் பத்தி யோசிக்க நேரமில்லயாம்" என்று டகிள் அடித்துவிட்டு அவரிடம் இருந்து கழன்று கொண்டேன்.

இன்று வரை நானும் அந்த சிட்சுவேஷன் என்ன? கேள்வி என்ன? பாரி வள்ளல்தான் க்ராக்தனமாக ஏதாவது கொடுத்தாரா? நான்தான் தவறாகப் புரிந்து கொண்டு சொதப்பி விட்டேனா என்று யோசித்து யோசித்து பார்க்கிறேன். எனக்கே பல சமயம் மண்டை குழம்பி விடும். கண்ணதாசன் அப்போதே என்னை மன்னித்து விட்டிருப்பார் என்று நிச்சயமாக நம்புகிறேன்.